https://twitter.com/kalaiyalan

My photo
NATIONAL & STATE AWARD winner for the short film KARNA MOTCHAM. Writer, Film Maker, Associated Director SHANKAR sir for #NANBAN #I #2.o / https://twitter.com/kalaiyalan

Friday, October 12, 2012

கர்ண மோட்சம் - ஒரு தேசியப் பயணம்!


தேசியவிருது அறிவிக்கப்பட்ட அன்றே விழாவுக்கு என் அப்பாவை அழைத்துச் செல்ல வேண்டும் என்பது நான் முடிவு பண்ணியது. இதை ஹாசினி பேசும் படத்தில் சுகாசினியிடம் சொன்னபோது ஒரு விமான டிக்கெட்டும் அசோக் ஓட்டலில் ஒருவர் தங்கும் வசதியும்தான் கொடுப்பார்கள் உங்கள் அப்பாவை எப்படி அழைத்துப் போவீர்கள் நிகழ்ச்சியிலேயே கேட்டார். நான் உறுதியுடன் இருந்தேன்.
சில தினங்கள் முன் முகம் நிறையத் தாடியுடன் மௌனமாக நான் அமர்ந்திருந்ததை அவர் பார்க்கவில்லை என்றே நினைத்திருந்தேன். நெடுந்தொலைவு பயணம் போனவர் அங்கிருந்து என்னை அலைபேசியில் அழைத்து, ‘ஏன்டா இப்படி உக்காந்திருக்க... நாந்தான் இருக்கனே... உன் முகத்தைப் பாக்கவே முடியல... யப்பா... ஒன்னும் கவலைப்படாதடா... நீ இப்படி உக்காந்து பாத்தது இல்லையேடா... மனசுக்குள்ள போட்டு போட்டு ஒன்னும் நினைக்காதப்பா... நான் இருக்கேன்ல.....’ முடிவில்லாத அன்பின் வார்த்தைகள்.
அவர் என்னைப் பார்க்க வாய்ப்பில்லை. பார்த்திருக்க மாட்டார் என்றே நினைத்திருந்தேன். எதிராக, நான் தண்ணீர் குடித்த விதம் முதல், சோற்றுப் பருக்கையை எப்படிக் கூட்டி விழுங்குகிறேன்; என் தொண்டை எப்படி அந்தக் கவளத்தை உள் வாங்கி இழுத்துச் செல்கிறது;  அதைச் சீரணிக்கும் முறை இவனுக்கு எப்படி இருக்கும் என்பது வரை பார்க்காமலே பார்த்திருக்கிறார். அவர்தான் எங்கள் அப்பா கே.கே.சிவசண்முக ராஜா! அன்புமிகும் நேரங்களில் தன்னைத் தானே இப்படி நீண்ட பெயரிட்டுச் சொல்லிக்கொள்வார்.  அவர் எப்போதும் இப்படித்தான்.
தேசிய விருது பெற புது டில்லிக்கு அவரையும் அழைத்தேன். இந்த விழாவுக்கு அரசாங்கம் எனக்கு மட்டுமே டிக்கெட் கொடுக்கும். அப்பாவை எப்படி அழைத்துப் போவது..! அங்கெங்கெனாதபடி தொழில் முடித்தும் பணி முடித்தும் மீண்டும் வேண்டியிருந்ததொரு பிச்சை. பயிலகத்திலிருந்து ஆசிரியர் மதன் கேப்ரியேல் தன் நண்பர் வழியாக அப்பாவுக்கான ஒரு வழிச்செலவைப் பெற்றுத் தந்தார். ஒருவழியாக டில்லி ஏர் இந்தியா விமானத்தில் அவருக்கு டிக்கெட் கிடைத்தது. புறப்படும் முந்தின இரவு, கே.கே. நகரில் நாங்கள் இருந்த ஒற்றை அறையின் காந்தல் அவருக்குப் பிடிக்காது என்பதை மறுநாள் விருதுபெறச் செல்லும் சிகாமணி வைபவத்துக்குப் பயன்படுத்திக்கொண்டோம்.
முதல்நாளே சொல்லி புக் பண்ணியிருந்த கால் டாக்ஸி ஆறரை மணிக்கெல்லாம் வந்து நின்றது. நானே புக் பண்ணிய கால் டாக்ஸி அது. எங்களை ஏனோதானோவென்று நினைத்தப் பக்கத்து வீட்டுக்காரர்கள் (இது ஒரு தனிக்கதை. பின்னால் இதை விவரமாக எழுதுகிறேன்.)  என்னைக் கேவலமாக நினைத்தவர்கள், நான் கால் டாக்ஸியில் ஏறி விமானம் பிடிக்க மீனம்பாக்கம் போவதைப் பார்க்கமாட்டார்களா..! ம்ம்.... கதவுகூடத் திறக்கவில்லை... ஒருவாய் டீத் தண்ணீருக்கு அலைந்த தெருவில் ஜம்பமாக அந்த டாக்ஸிக்குள் ஏறி அமர்ந்தேன்.
பத்தரை மணி விமானத்துக்கு ஒரு மணி முன்பே இருக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார்கள். மேட்டுப்பாளையம் மார்க்கெட்டின் குறுகிய சந்தின் குறுகிய வீட்டில் எப்போதுமே எங்களுக்காக இடம் வைத்திருப்பவர் சித்தப்பா இளவரசு. அப்பாவை அழைத்துக்கொண்டு அங்கிருந்து விமான நிலையம் வந்தேன்.
நான், தேசிய விருது பெறச் செல்கிறேன் என்பதைவிடவும் ஒரு கலெக்டர் (இ.ஆ.ப.) அவருடன் (!) வருகிறார் என்பதையே பெருமையாக நினைத்தார். பதட்டப்பட்டார். இ.ஆ.ப.வை வழியனுப்ப வந்தவர்கள் எனக்கு வாழ்த்துகளைச் சொன்னார்கள். அப்பா விமான நிலையத்தின் ஒரு கோப்பைத் தேநீரைக் குடிக்கச் சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.
நானும் அவரும் சென்ற முதல் விமானப் பயணம். நான் domstal போட்டுக்கொண்டது அவருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்!

No comments:

Post a Comment

Share