சில மணி நேரங்களுக்கு முன்னால்தான் கதிரவனும் மணிமாறனும் கும்பகோணத்திற்கு ரயிலில் வந்து சேர்ந்திருந்தார்கள். மறுநாள் காலை மணிமாறனின் நண்பனுக்குத் திருமணம். அதற்காகத்தான் சென்னையிலிருந்து அப்பாவும் பிள்ளையுமாகச் சென்னையிலிருந்துக் கிளம்பி வந்திருந்தார்கள். மணிமாறன் கும்பகோணத்துக்காரன்தான் என்றாலும் கல்லூரியில் கணிணி அறிவியல் படிப்பு, தொடர்ந்து கிடைத்த மென்பொருள் நிறுவன வேலை என அவன் பதினைந்து ஆண்டுகளாகச் சென்னைவாசி ஆகியிருந்தான். குறையில்லாச் சம்பளத்துடன் உடன் வேலை செய்து வந்த நிர்மலாவைக் காதலித்து திருமணம் செய்துகொண்டான். அவர்களுக்கு கதிரவன் பிறந்த பிறகு இந்த எட்டு வருடங்களாக அப்பா பிள்ளை இருவருக்கும் மற்றவர்தான் உலகம். வேலை, பள்ளி, நேரங்கள் தவிர இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்திருந்ததே இல்லை. அப்படியிருக்க நண்பனின் திருமணத்திற்காக கும்பகோணம் வந்து விடுதியில் அறை எடுத்து தங்கிய நிலையில், இப்படி நள்ளிரவு நேரத்தில் மகனைத் தனியே விட்டு மணிமாறன் அப்படி எங்கேதான் சென்றிருப்பான்?
உறக்கமும் பதட்டமுமாக அறையைச் சுற்றி வந்த சிறுவன் கதிரவன் தொலைபேசியை எடுத்து எண் ஒன்பதை அழுத்தினான். நீண்ட நேரத்திற்கு பிறகு மறுமுனையில் அழைப்பு ஏற்கப்பட்டது. “எங்க அப்பாவைப் பாத்தீங்களா..?” என ஏக்கத்துடன் கேட்டான் கதிர்.
மேலக்காவேரியின் நான்காம் படித்துறையில் கால் வைக்க முடியாத அளவிற்கு மதுப் புட்டிகளின் உடைந்த கண்ணாடிச் சில்லுகள் சிதறிக் கிடந்தது. சூழ்ந்திருந்த நடுநிசியின் பேரமைதியில் செருப்புக் காலுடன் அங்கே நின்றுகொண்டிருந்தான் மணிமாறன். சற்று தொலைவில் ஆற்றங்கரையை ஒட்டினச் சிறு வீடுகளுக்காகத் தெருவில் போடப்பட்டிருந்த மின் விளக்கு அணைந்து அணைந்து எரிந்தபடியிருந்தது. நின்று நின்று வந்த அந்த வெளிச்சத்தில் காவிரி ஆற்றையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், மணிமாறன். அது சூலை மாதம். குறுவைக்குத் திறக்கப்பட்ட காவிரி, கரையின் இருமருங்கையும் தொட்டுக்கொண்டு ஓட வேண்டிய காலம் அது. மணிமாறன் அப்போது நின்றிருந்த படிக்கட்டில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் எனக் காவிரியோடு கலந்தே வளர்ந்த அவன் நன்கறிவான். ஆனால், அன்று அவன் இமைக்காமல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த போது கீழே இன்னும் பத்து படிக்கட்டுகள் உடைந்த கண்ணாடிச் சில்லுகளும், நெகிழிக் குப்பைகளுமாக இறைந்து கிடந்தது. அதற்கும் கீழே களிமண் தரையில் ஆங்காங்கே சிறுசிறு செடி வகைகள் மண்டி வளர்ந்திருக்க மணல் என்ற மேலாடையின்றிப் பரிதாபமாகக் கிடந்தாள் காவிரித்தாய். ஆம். காவிரி அவனுக்கும் தாய்தான். அதனால்தான் நெடுங்காலத்திற்குப் பிறகுச் சொந்த ஊர் வந்த அவன், எப்போதும் பிரிந்திராதத் தன் எட்டு வயது மகனைக் கூடத் தனிமையில் விட்டுவிட்டுத் தாயைக் காணத் தேடி ஓடி வந்திருந்தான்.
தூரத்தில் எதிர்க் கரையை ஒட்டி மட்டும் கொஞ்சமாக நீர் இருப்பது வெளிச்சத்தில் மினுங்கித் தெரிந்தது. அதிலும் ஓட்டம் இல்லை, தேக்கம்தான். அக்கம் பக்கத்திலிருந்து கழிவு நீர் வந்து கலந்தபடி இருக்க வேண்டும். சாக்கடைத் துர்நாற்றம் சுற்றிலும் வீசியபடியிருந்தது. மணிமாறன் மெள்ளப் படிகளில் இறங்கி ஆற்றில் கால் வைத்தான். நீருக்குள் மணலும் மணலுக்குள் காலுமாகப் பொதபொதவென இறங்கிப் பழக்கப்பட்ட அதே கால்கள், அன்று கட்டாந்தரையாகக் கிடந்த ஆற்றில் பாதங்களை வைக்கையில் அவனுக்கு கூசியது. இனம்புரியாத ஓர் இயலாமையின் அழுத்தமும் இறுக்கமும் அவன் உள்ளமெங்கும் நிறைந்திருந்தது. அவனோடு அந்த ஆற்றில் உருண்டு பிரண்டு விளையாடி வளர்ந்த நண்பர்கள் கூறத் தற்காலக் காவிரி ஆற்றின் நிலையை ஓரளவு அவன் அறிந்திருந்தான் என்றாலும் இத்தனை மோசமாக இருக்கும் எனக் கொஞ்சமும் அவன் எதிர்பார்க்கவில்லை. மெள்ள நடந்து ஆற்றின் மையப் பகுதிக்கு வந்தான். அந்நேரத்திலும் சற்று தொலைவில் நான்கைந்து ஆண்கள் நட்டாற்றில் அமர்ந்துச் சத்தமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மணிமாறன் சில நொடிகள் அவர்களைப் பார்த்தபடி நடந்து வரச் சட்டென அவன் கால்களில் அந்த மாற்றத்தை உணர்ந்தான். அவன் வந்து சேர்ந்திருந்த இடத்தில் காலுக்குக் கீழே ஒரு இருபதடித் தூரத்திற்கு மணல் திட்டு ஒன்று மிச்சமிருந்தது. சோர்வாக உணர்ந்த அவன் சுற்று முற்றும் ஒரு முறைப் பார்த்துவிட்டு அப்படியே அந்த மணல் திட்டில் அமர்ந்தான். குப்பைக் கூளங்களாலும் கழிவுகளாலும் அசுத்தப்படுத்தப்பட்டு, மணல் படிமம் மொத்தமாகக் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு மோசமான நிலையில் இருந்தாலும் அவனைப் பொறுத்தவரையில் காவிரி அவனுக்கு தாய். அதை அவன் மனதார நம்பினான். நீண்டதொரு பெருமூச்சு விட்டு அப்படியே அந்த மணலில் சாய்ந்து வானம் பார்த்துப் படுத்தான், மணிமாறன். மேகங்கள் சூழாத வானில் விண்மீன்கள் சோபையாகத் தெரிந்தன. பக்கத்தில் ஒற்றைத் தவளையொன்று சீரான இடைவெளியில் கத்தியபடி இருந்தது அவனை ஏதோ விசாரிப்பது போல இருந்தது. காவிரி அவன் ஆழ் மனதில் கம்பீரமாக ஓடத் தொடங்கியது.
பள்ளி நாட்களில் ஜூன் மாதப் பாதியில் தொடங்கி டிசம்பர் வரை மணிமாறனுக்கு காவிரிதான் அளவற்ற களிப்பை அள்ளி அள்ளி வழங்கும். காலை எட்டு மணி வாக்கில் அந்த நான்காம் படித்துறைக்கு வந்தானேயானால் எட்டு மணி வரை நீர் வரத்துக்கு ஏற்ப நீடித்திருக்கும் அவனது ஆனந்தக் குளியல். சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் அவனது பெரும்பாலானப் பகல் பொழுதுகள் காவிரியோடுதான் கரையும். ஆற்றங்கரையை ஒட்டிய வீடுகளின் பிள்ளைகளைக் கண்டால் அவனுக்கு கொஞ்சம் பொறாமையாகவே இருக்கும். அவர்கள் கூட்டம் கூட்டமாய் வந்து ஆற்றையே அதகளம் செய்துகொண்டிருப்பார்கள். மணிமாறன் தனியன். சிறு வயதிலிருந்தே எவரோடும் எளிதில் பேசிப் பழகிடாதவன். ஆற்றங்கரை வீட்டுப் பிள்ளைகளின் அட்டகாசத்தை உள்ளூர ரசித்தபடியே அவன்பாட்டுக்குத் தனியாகப் படித்துறையின் உச்சி மேடையிலிருந்து குதித்து நீந்தி விளையாடிக் குளித்துவிட்டு மணி ஆனதும் ஆடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பிவிடுவான்.
சனி, ஞாயிறுகளில் வீட்டில் காலை உணவை முடித்துக்கொண்டு காவிரிக்கு வந்தால் மத்தியானம் மூன்று - சில சமயம் நான்கு - என அவன் வீடு திரும்ப மணி ஆகியிருக்கும். காவிரியில் ஊறிய அவன் கண்கள் சிவசிவக்க, உள்ளங்கை கால்களின் வெள்ளைத் தோல்கள் சுருங்கிப் போயிருக்கும். வாரந்தவறாமல் வீட்டில் அதற்காக வாங்கும் திட்டுகளோ, அடிகளோ, அவனுக்கு ஒரு பொருட்டாகவே இருந்ததில்லை. அவனது கவலையெல்லாம் சனிக்கிழமையாக இருந்தால் அடுத்த நாள் விடியல் குறித்தோ, ஞாயிற்றுக் கிழமை என்றால் அடுத்தவாரச் சனிக்கிழமையின் வருகை குறித்தேதான் இருக்கும்.
அந்த நாட்களில் கரை புரண்டோடும் காவிரியின் மென் பச்சை நிற நீர்ப் பிரவாகம் காணவே ஆனந்தமாயிருக்கும். நீரோட்டத்திற்கு அடியில் மணல் தரையில் இருக்கும் மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும் வெள்ளம் பந்து போல வளையம் வளையமாக மேலெழும்பிக் கொப்பளிக்கும். ஆற்றங்கரைப் பிள்ளைகள் படித்துறையின் உச்சி மேடையிலிருந்து போடும் தண்ணீர் எழும்பல் குதியைக் காணவே சிறப்பாக இருக்கும். நீரைப் பிளந்துகொண்டு அவர்களின் உடல் தண்ணீருக்குள் அமிழ்ந்ததும் சுற்றிலும் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முட்டிக்கொள்ளும் வெள்ளம் அருகில் உள்ள அரச மரத்தின் உச்சி வரை நீர்த் திவலைகளாக எகிறும். மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கை குருவிக் கூட்டமெல்லாம், எழும்பி மேலே வரும் அந்த நீர்த்திவலைகளோடுச் சிறகசைத்துப் படபடத்துப் பறந்து, மீண்டும் அடுத்த குதியலுக்கு அணியமாகிக் கிளைகளில் போய் அமர்ந்துகொள்ளும். எழும்பியத் தண்ணீர்த் துளிகள், அக்கம் பக்கத்தில் குளிப்பவர்கள், துணி துவைப்பவர்கள் மேலெல்லாம் ஆலங்கட்டி மழை போலச் சிலுசிலுவென்று விழும். அவர்களில் யாரும் அதற்காக முகம் சுழித்தோ, வசை பாடியோ அங்குள்ள யாரும் எப்போதும் பார்த்ததே இல்லை. யாருடைய குதியால் அதிக உயரம் தண்ணீர் எழும்பியது என ஆற்றங்கரைப் பிள்ளைகளுக்கு இடையே பெரிய போட்டியே நடக்கும். ஏழெட்டு வயதுள்ள சிறுவர்கள் முதல், இருபது இருபத்தைந்து வயதுகளில் உள்ள இளைஞர்கள் வரை, அவரவர் வயதினரோடு நடந்து கொண்டிருக்கும் அந்தக் குதியாட்டத்தைப் பார்த்தபடி இருக்கும் மணிமாறனுக்குத் தானும் அதுபோல ஒரு நாள் குதிக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை.
’தண்ணி எம்பல்’ குதிக்க ஒரு தனித்த பயிற்சி தேவை. குதிப்பவனுக்கு உச்சி மேடையில் தான் எம்பியதிலிருந்து ஆற்றுத் தண்ணீரின் மட்டத்தைத் தொடும் கால இடைவெளிக்குள் தன் உடலை ஒரு கவண் போல ஆக்கிக்கொள்ளும் திறமை தேவை. அதாவது, உடம்பின் இடைப் பகுதியைப் புவி ஈர்ப்பு மையத்தின் புள்ளியாக்கி மேலுடம்பையும் கால்களையும் சரியானக் கோணத்தில் கவண் வடிவத்திற்கு மாற்ற வேண்டும். அது மட்டுமின்றி முழங்கால்களை மடக்கி ஒன்றின் குறுக்கே மற்றொன்றை வைத்துக்கொள்வது முக்கியம். இதெல்லாவற்றையும் உச்சி மேடையிலிருந்து புறப்பட்டுத் தண்ணீர் மட்டத்தை அடைவதற்குள் ஒருவன் முழுமையாகச் செய்து விட்டானென்றால் அவன் ஒரு வெற்றிகரமானத் தண்ணி எம்பல்காரன். அவன் குதியலின் விளைவாக ஏற்பட்ட வெற்றிடத்தில் மோதி எழும்பியத் தண்ணீர் அரச மரத்தின் உச்சிக் கிளையை நிச்சயம் தொடும். அப்படி நேர்த்தியாக வளைக்கப்பட்ட உடல் ஆற்றில் விழும்போது ஏற்பட்டச் சத்தத்தைவிட நீரைப் பிளந்து அந்த உடல் உள்ளே அமிழ்ந்த பிறகு உருவாகும் வெற்றிடத்தில் மோதும் தண்ணீரின் சத்தமே ஒரு பெரிய வெடிச் சத்தம் போலக் கேட்கும்.
மணிமாறனுக்குத் தண்ணி எம்பல் குதிக்க நிரம்ப ஆசை. ஆனாலும் ஒரு கத்துக்குட்டியான அவன் பெரிய பெரிய வித்தைக்காரர்களாக இருக்கும் ஆற்றங்கரைப் பிள்ளைகளோடு சரிக்கு சமமாகப் போய் குதிக்க கூச்சப்பட்டான். அவர்கள் அதிகமில்லாத நேரங்களாய்ப் பார்த்து தண்ணி எம்பல் பயிற்சியை அவன் விடாமல் செய்து பார்க்க ஆரம்பித்தான். பல நேரங்களில் அவனுக்கு நாசியில் நீர் புகுந்துப் புறையேறியது. வேறு வழியின்றி அவன் தன் இடக்கையால் மூக்குத் துவாரங்களை மூடியபடிக் குதிக்க ஆரம்பித்தான். மற்றவர்கள் குதிக்கும் போது மோதி எழும் தண்ணீரின் சத்தத்தை அவன் கவனமாகப் பார்த்து உள்வாங்கிக் கொண்டான். தான் குதித்து நீருக்குள் அமிழ்ந்ததும் தலைக்கு மேலே மோதி எழும்பும் தண்ணீரின் சத்தத்தை அடியாழத்திலிருந்தே கூர்ந்து கேட்டான். மாதக்கணக்கில் தொடர்ந்த பயிற்சியின் விளைவாக ஒரு நாள், குதித்து அவன் நீருக்குள் மூழ்கிய பிறகு, வெளியே மோதியத் தண்ணீரிலிருந்து வெடிச்சத்தம் போலக் கிளம்பியதைக் கேட்டான்.
பத்தடி ஆழத்திற்குள் காவிரிக்குள் மூழ்கிக் கிடந்த மணிமாறன், பரம திருப்தியோடு அன்று புன்னகைத்தான். அவனைப் பொறுத்தவரையில் அது ஒரு பெரிய சாதனை. அன்று முழுவதும் தனது தண்ணி எம்பல் சாதனை பற்றியே எண்ணியிருந்து வகுப்பாசிரியரிடம் வசமாக மாட்டி வாங்கிக் கட்டிக்கொண்டான்.
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட மணிமாறன், பின்னாட்களில் தானும் வரிசையில் சென்று ஆற்றங்கரைப் பிள்ளைகளோடுத் தண்ணி எம்பல் போட்டுக் குதிக்க ஆரம்பித்தான். மணிமாறன் தன் பதினான்காவது வயதில் காவிரியில் தேர்ந்த ஆறோடியாகி இருந்தான். நீரின் இழுப்பு அதிகமான நாட்களில் எதிர் நீச்சலும், கரை புரண்டோடும் வெள்ள நாட்களில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திச் செல்வதும் அக்காலகட்டத்தில் அவன் மனதிற்கு நெருக்கமான விளையாட்டுகள்.
காவிரி, சாமிமலையைக் கடந்துதான் கும்பகோணம் வரும். சாமிமலையில் ஆற்றங்கரையை ஒட்டிச் செழித்து வளர்ந்திருக்கும், நாட்டுக் கொய்யாத் தோப்புகள். உட்புறம் செக்கச் செவேலென்றிருக்கும் சாமிமலை நாட்டுக் கொய்யாப் பழங்கள், அவற்றின் சுவைக்காகச் சுற்று வட்டாரத்தில் பேர் போனவை. ஆடி மாதத்தின் காற்றடி நாட்களில் கரையை ஒட்டியுள்ள தோப்பு மரங்களிலிருந்து உதிர்ந்து விழும் பழங்கள், ஆற்றில் மிதந்து வந்து நீந்திக் களைத்திருக்கும் மணிமாறனின் பசி போக்கும்.
கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த பள்ளிக்குழந்தைகளின் நினைவாகத் தற்போது காவிரி ஆற்றை ஒட்டி பாலக்கரையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுப் பூங்கா இருக்கும் இடத்தில்தான் மணிமாறனின் அக்காலப் பள்ளி நாட்களில் நகராட்சியின் காய்கறிச் சந்தை இருந்தது. சாமிமலையிலிருந்தும் சுற்றிலும் உள்ள சிறுசிறு ஆற்றங்கரைக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த மா, வாழை, கத்தரி, வெண்டை, முருங்கை, போன்ற காய்கறிகளைக் கும்பகோணத்தின் நகராட்சி சந்தைக்கு காவிரியாற்றின் வழியாகத்தான் அப்போது கொண்டு வருவார்கள். விளைந்த காய்கறிகளின் பசுமை மாறாமல் கொய்து மூங்கில் கூடைகளில் நிரப்பி, தண்ணீரில் மிதக்கும் விதமாக பெரிய தகரக் குவளைகளைத் அடிப் பகுதியில் வைத்து உருவாக்கப்பட்ட தோணிகளில் ஏற்றிக்கொண்டு காவிரியின் நீரோட்ட வேகத்தில் உற்சாகமாகக் மிதந்து செல்லும் விவசாயிகளை வியந்து பார்ப்பான் மணிமாறான். என்றாவது ஒரு நாள் சாமிமலைக்குப் போய், அவர்களிடம் எப்படியாவது கெஞ்சி அனுமதி பெற்று, இது போலக் கும்பகோணம் வரைத் தோணியில் மிதந்து வர வேண்டும் என அவன் மனதிற்குள் ஆசைப்பட்டதுண்டு. கடிந்தோடிய காலம் அவனுக்கு அந்த வாய்ப்பை வழங்கவே இல்லை.
பனிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு கல்லூரிப் படிப்பிற்காகச் சென்னை வந்த மணிமாறன், படிப்பை முடித்ததும் வேலை, திருமணம், குழந்தை, குடும்பம், எனத் தொடர்ந்து சென்னையிலேயே வாழப் பழகிவிட்டான். சென்னைவாசி ஆன பிறகு சில மாதங்களுக்கு ஒரு முறை என்றிருந்த அவனின் கும்பகோணப் பயணம், படிப்படியாக ஆண்டுக்கொரு முறை, பின்னர் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை என ஆகிவிட்டது. அரிதாக நிகழும் அவனது கும்பகோணப் பயணம் ஒவ்வொன்றின் போதும் கண் முன்னே வறண்டு சுரண்டப்பட்டு வரும் காவிரியைப் பார்த்து யாரும் அறியாமல் மனதிற்குள் கலங்குவான். காவிரி தனக்குள் கலந்திருந்த அந்தப் பால்ய நாட்களை அவன் தன் ஆயுட்காலம் முழுமைக்கும் மறக்க மாட்டான்.
மூடியிருந்த மணிமாறனின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர்த் துளியொன்று அவன் படுத்திருந்தக் காவிரியின் மணலில் விழுந்தது. அப்போது சத்தமாக அவன் அலைபேசி ஒலிக்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் கேட்டு அருகிலிருந்து குரல் எழுப்பிக்கொண்டிருந்த ஒற்றைத் தவளைச் சட்டெனத் தன் வாயை மூடிக்கொண்டது. பழைய நினைவுகளில் கரை புரண்டு ஓடியக் காவிரியில் மூழ்கியிருந்த மணிமாறன், பதட்டத்துடன் நிகழ் உலகிற்கு வந்து தன் கால் சட்டைப் பையிலிருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தான். ஏதோ புதிய எண்ணிலிருந்து வந்து கொண்டிருந்தது அழைப்பு. ஏற்று காதில் வைத்தான். அவர்கள் தங்கியிருந்த விடுதியின் மேலாளர் பேசிவிட்டு இணைப்பை கதிரிடம் கொடுத்தார். மறுமுனையில் “அப்பா... ” என ஒரு வார்த்தை மட்டும் சொல்லிவிட்டுச் சத்தமாகக் கதறி அழுதான் கதிர்.
சுதாரித்து எழுந்த மணிமாறன், “கதிரு... அழாதடா. அப்பா இங்கதான் பக்கத்துல இருக்கேன். இதோ வந்துடறேன் பார்...” எனக் காதில் அலைபேசியை வைத்திருந்தபடிச் சொல்லிக்கொண்டே அங்கிருந்து ஓடத் தொடங்கினான்.
“எங்கப்பா போனீங்க..?” எனச் சற்றே சமாதானம் ஆனவனாக கேட்டான் கதிர்.
“எங்க அம்மா ஒருத்தவங்க உடம்புக்கு முடியாம இருக்காங்கப்பா. அவங்களைப் பாக்கலாம்னு போனேன்...”
“ஏன் எங்கிட்டச் சொல்லல? என்னையும் கூட்டிக்கிட்டுப் போயிருக்கலாம்ல?”
“நீ அசதியா தூங்கிகிட்டிருந்த. அதான் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடுவோமேன்னு நான் மட்டும் கிளம்பி வந்துட்டேன்... சாரிப்பா. அப்பா அஞ்சு நிமிசத்துல அங்க இருப்பேன், சரியா...”
தொலைவில் மணிமாறன் ஓட்டமும் நடையுமாகச் செல்வதைப் பார்த்தபடி அந்தத் தவளை மீட்டும் சத்தமிடத் தொடங்கியது. கிட்டதட்ட விடிய ஆரம்பித்திருந்தது.
கும்பகோணத்தில் திருமண நிகழ்வை முடித்துக்கொண்டு அன்று முற்பகலிலேயே ரயிலில் புறப்பட்டுச் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள் மணிமாறனும் கதிரும். நீளமானக் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் மேல் ரயில் கணத்த சத்தத்துடன் தடதடத்து ஓடிக்கொண்டிருந்தது. ரயிலின் சன்னலுக்கு வெளியே பக்கவாட்டில் அதிகச் சத்தத்துடன் கடக்கும் ஆற்றுப் பாலத்தின் பெரிய பெரிய இரும்புத் தூண்களைக் கதிர் வியப்புடன் பார்த்தபடி இருந்தான். மணிமாறன் பாலத்திற்கு கீழே தேங்கியிருந்த தண்ணீரையே பார்த்தபடி வந்தான். சிறு வயதில் மணிமாறன், தன் அப்பாவுடன் அதே கொள்ளிடப் பாலத்தைத் ரயிலில் கடக்கும்போது அவர் சொன்ன தகவல் ஒன்று அவன் நினைவுக்கு வந்தது. அண்ணாத்துரை இறந்த சேதி கேள்விப்பட்டு தஞ்சை மாவட்ட மக்கள் பல்லாயிரக் கணக்கில் கூட்டம் கூட்டமாக மதறாசுக்கு கிளம்பினார்கள். பேருந்துப் போக்குவரத்து அவ்வளவாகக் கிடையாது. ரயிலுக்கு உள்ளே இடம் இல்லாமல் நூற்றுக் கணக்கானோர் அதன் மேற்கூரையில் அமர்ந்து பயணப்பட்டார்கள். அந்த ரயில், வேகமாக இந்தக் கொள்ளிடப் பாலத்தில் நுழையும்போது அமர்ந்திருந்தவர்களில் பலர் எழுந்து பார்க்க முயன்று பாலத்தின் மேற்பரப்பு தூண்களில் தலை அடிபட்டுச் செத்தார்கள்.
அப்பா தனக்குச் சொன்ன அந்தத் தகவலை மகன் கதிருக்குச் சொல்லலாமா என மணிமாறன் சிந்தித்துக் கொண்டிருந்தபோது அவனது அலைபேசி அழைத்தது. எடுத்துப் பேசினான். மறுமுனையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு நீச்சல் பயிற்சி மையத்திலிருந்து அழைப்பதாகவும் கதிரவனுக்கு அடுத்த நாள் காலை முதல் நீச்சல் வகுப்புகள் தொடங்குவதை நினைவூட்ட அந்த அழைப்பு என்றும் ஒரு பெண்மணி நளினமான ஆங்கிலத்தில் சொன்னார். அதைக் கேட்டுக்கொண்ட மணிமாறன், நன்றி சொல்லி இணைப்பைத் துண்டித்தான்.
நீளமாகத் தொடர்ந்த ரயிலின் பெட்டிகளில் மக்கள் நிறைந்து அமர்ந்திருந்தார்கள். மணிமாறனுக்கு எதிர்த்திசையில் சற்று தொலைவில் பார்வையற்ற மாற்றுத் திறனாளி ஒருவர் தன் கணீர்க் குரலில், ”ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு; ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு” எனத் தொடங்கிப் பாடியபடி தன் கையில் பிடித்திருந்த குச்சியால் வழியைத் துழாவிக்கொண்டு மெள்ள நடந்து வந்தார். சற்றும் எதிர்பாராமல் திடீரென அந்தப் பாடலைக் கேட்ட மணிமாறன் உணர்ச்சி வயப்பட்டான். அவனை மீறிக் கண்களிலில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பாடலைக் கேட்டு ரயிலின் சன்னல் பக்கமிருந்துத் திரும்பியிருந்த கதிர், எதேச்சையாகத் தன் அப்பா கண்கள் கலங்கியிருப்பதைப் பார்த்தான். கதிர் தன்னைக் கவனிப்பதை உணர்ந்த மணிமாறன், கைக்குட்டையை எடுத்துக் கண்களை, முகத்தைத் துடைக்கும் விதமாக மூடிக்கொண்டான். என்ன நினைத்தானோ, கதிர் சட்டெனத் தன் அப்பாவைக் கட்டிப் பிடித்தபடி மடியில் சாய்ந்துகொண்டான். தொடர்ந்து பாடி வந்த, நடுத்தர வயதில் வெள்ளை நிறச் சட்டை அணிந்திருந்த அந்த பார்வையற்ற நபர், மணிமாறன் அமர்ந்திருந்த இடத்தருகே வரும்போது,
’ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - இந்த
ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்’ எனப் பாடியபடியே கடந்தார்.
தொடர்ந்து அவர், ’ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு; சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு, தெய்வத்தின் கட்டளை ஆறு’ எனப் பாடியபடி மெள்ள நடக்க, அந்த ரயில் கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை விரைந்து கடந்துகொண்டிருந்தது.
- ச. முரளி மனோகர்.